Saturday, October 22, 2011

வெற்றி ‘ குழப்பமில்லா குறிக்கோள்


ஆசை, குறிக்கோள் இவைகளை மனதிற்குள் உருவாக்குவதில் பல நேரங்களில் நம்மில் பலர் குழப்பிக்கொள்கிறார்கள். விருப்பப்படுவதை எப்படி பெறுவது? என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று அறியாமலே நம்மால் நம் மனதை ஒருமுனைப்படுத்த முடியாது. நமது மூளைக்கு இப்படிப்பட்ட பயனைத்தான் பெறப் போகிறோம் என்றதெளிவான ஒரு படத் தோற்றத்தை உருவாக்கிக் கொள்ள நம் மனதிற்குள் தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்.
‘தொடங்குவதில் வெற்றி தொடர முனைகிறது’ என்று ‘யாரோ’ சொன்ன பழமொழி நம் மனதிற்கு செய்தியை அனுப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
நமக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் குழப்பத்தின் உச்சத்தில் இருப்பதைக் கண்ட அனுபவம் நமக்கு இருக்கலாம். ஒன்றை செயல் படுத்துவதாக சொல்லிக்கொண்டு சொல்லாததை செயல்படுத்த முனைய முயற்சிப்பார்கள். செயல்படுத்துவதில் தடுமாற்றம் ஏற்படுவதால் அடுத்த செயலுக்கு மாறுவார்கள். இப்படியே மாறி மாறி சிந்திப்பதும் செயல்படுத்துவதுமாக தோல்வியை சந்திப்பதையே வாடிக்கையாக்கி கொண்டிருப்பார்கள். அவர்களின் பிரச்சனை மிகவும் தெளிவானது. தீர்வும் மிகவும் இலகு வானது. எதை அடைய வேண்டுமென்று அவர் களுக்கே தெரியவில்லை என்பதுதான் உண்மை. அதனை தெளிவுபடுத்திக் கொண்டால் அவர் களது எண்ணம் ‘வெற்றி’ உருமாற்றமடையும்.
என்ன நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்துக்கொள்ள வேண்டும். மாறாக என்ன நடக்கக்கூடாது என்பதில் அதீத கவனமும் அக்கறையும் எடுத்துக்கொள்வதால் நமக்கு குறிக்கோள் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.
நமது புலன்களுக்கு குறிக்கோளின் நன்மையை விவரிக்கும்படி உணர்வுகளை படமாக்கி மனத்திரையில் திரையிட வேண்டும். உதாரணத்திற்கு உங்களுக்கு பிடித்த ஒரு உணவு வகையை நினைத்து அதனை சாப்பிட்டால் எப்படி சுவையாக இருக்கும் என்று மனதில் அதை சாப்பிடுவதாக எண்ணுங்கள். உமிழ்நீர் சுரக்கிறதா? சுரந்தால் நீங்கள் உங்கள் ஆசையை உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையேல் ஏனோதானே என்று நினைத்திருக் கிறீர்கள் என்றஉண்மையை நீங்களே உணர்வீர்கள். இதைப் போலவே தான் உங்கள் குறிக்கோளும் உணர்வுப்பூர்வமான படமாக மனத்திரையில் திரையிடப்பட வேண்டும்.
குறிக்கோளை அடையும்போது எப்படி உணர்வீர்கள்; எப்படி மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்; பாராட்டு பெறும் தருணத்தில் எத்தகைய சந்தோஷ வார்த்தைகளை உங்கள் செவிகள் கேட்க நேரிடும் என்பதை மனதில் படமாக்கிப் பாருங்கள். உங்களின் வெற்றி எப்படிப் பட்டது என்று இப்போது உணர்வீர்கள்.
உங்களின் குறிக்கோளின் எதிர்கால வெளிப்பாடுகள் என்ன என்பதை மனக்கண் முன்னிருத்திப் பாருங்கள். கார் வாங்க வேண்டும் என்பதைவிட எந்த நிறுவனத்தின் எந்த வகை மாடல் கார் வாங்க வேண்டும் என்றோ தேர்வில் நிறைய மதிப்பெண் பெறவேண்டும் என்பதை விட என்னுடைய ’2 மதிப்பெண் 1193 ஆக இருக்கும் என்றோ வணிகம் அல்லது தொழில் மூலம் என்னுடைய வருமானம் வருடம் 5 இலட்சமாக இருக்கும் என்றோ உங்கள் குறிக்கோளில் தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும்.
நமது மூளை ஓர் உயிரியல் கணனி. அதில் உங்களது தேவை எதுவாக எப்படியாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக தவறில்லாமல் மனம் என்னும் மென்பொருளால் பதிவு செய்து விடுங்கள். நிச்சயமாக வெற்றி என்னும் செயல் வடிவத்தில் தான் வெளிப்படும்.
ஒரு செயலை தொடங்கும் முன் கண் களை மூடிக்கொண்டு வழக்கமாக சுவாசிப்பதை விட சற்று அதிகமான காற்றை சுவாசியுங்கள். சில நொடிகள் கழித்து சுவாசித்த காற்றைஅதிக நேரம் எடுத்துக்கொண்டு வெளியிடுங்கள். தொடர்ந்து சில தடவைகள் செய்யுங்கள். இப்போது உங்கள் செயல், செயல்திட்டம், வெற்றிநிலை இவைகளை மனதில் படமாக்குங்கள். பாராட்டு பெறப்போகும் செயலை செய்ய போகிறேன் என மனதில் பதிந்து ஒருமுக நேர்முக உந்தலுடன் செயலாற்றத் தொடங்குங்கள் இனி,
குழப்பமில்லா குறிக்கோள் நோக்கி நீங்கள்….
நிச்சயமான வெற்றி உங்களை நோக்கி….


Thanks : Author: ஆர். முருகேசன், M.A., M.Phil., Ph.D. (Psy)

0 comments:

Post a Comment