Friday, July 22, 2011

வெற்றி மீது வெற்றி வந்து சேரும்

புதியதாய் பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் தன்னம்பிக்கை வளர்க்கும் இப்புத்தகத்தின் கருத்துக்களை கண்களால் மனதில் பதிய காத்திருக்கும் உங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த சந்தோஷ நிமிடங்கள் மணிகளாக, நாட்களாக, வருட வருடங்களாக தொடர இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.
வெற்றி ஒருமுறை மட்டும் வருவதில்லை. நாமும் அப்படி வருவதை விரும்புவதுமில்லை. நாமோ நம் குழந்தைகளோ பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால் ப்ளஸ் டூவில் அதைவிட சிறப்பான வகையில் தேர்ச்சி பெறவிரும்புகிறோம். பிறகு கல்லூரி, வேலையில், தரம் உயர்ந்த வாழ்க்கை என தொடர்ந்து வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் உருவாகிக்கொண்டே இருக்கும்.
ஒருமுறை வெற்றி பெற்ற தருணத்தில் வெற்றியினால் ஏற்பட்ட சந்தோஷம் இருக்கும் அதேவேளை தோன்றும் இன்னொன்று என்னவென்றால் அடுத்த வெற்றியை இதேபோல் அல்லது இதைவிட சிறப்பாக பெறவேண்டும் என்பது தான். இப்படி வெற்றிமீது வெற்றி பெற இனிவரும் வார்த்தை கோவைகள் உறுதுணை புரியும்.
வாழ்க்கையில் சில பண்புகளை சிறப்பாக வளர்த்துக் கொண்டால் வெற்றியின் தொடர் ஓட்டம் நம்மை நோக்கித்தான்.
உற்சாகமும் பின்பற்றுதலும்
நாம் செய்யும் செயலை உற்சாகத்துடன் தொடங்கி அதை தொடர்ந்து பின்பற்றிட வேண்டும்.
கொள்கை
நாம் செய்யும் செயலை செய்வதற்கான கொள்கையை நிச்சயம் வகுத்துக்கொள்ள வேண்டும். நல்ல நோக்கமுள்ள கொள்கை வெற்றிக்கு அவசியம் தேவை.
திறமை
உண்மை, தேர்ச்சிபெற்ற திறமை, இவை நம் வெற்றிக்கான செயல்பாடுகளை இலகு வாக்கும். இந்த பண்புகளோடு நல்லதை எடுத்துக் கொள்வோம், தீயவைகளை விட்டொழிப்போம் என்ற மனப்பாங்கினை நமதாக்கிக் கொண்டு; நண்பர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டு, எதிரிகள்… அப்படி யாரும் இல்லை என்ற நிலைநோக்கி செல்லுங்கள். பணம் இருக்கிறது அல்லது இல்லை என்பதை மற்றவர்களிடம் பேசாதீர்கள். உங்களால் வாங்க முடியாத கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை தெரிந்து கடன் பெற்று வாங்காதீர்கள். பக்கத்துவீட்டுக்காக வாழாதீர்கள். நண்பர்களை மதித்து குழந்தைகளிடம் அன்பு கொண்டு வாழ்க்கையை பூர்ணமாக அனுபவியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மேற்கூறிய பண்புகளுடன் வெற்றியை நோக்கி நடந்து (செயல்படுங்கள்) பாருங்கள் அதற்கான நல்வழியும் சுகமும் தெரியும்.
வெற்றியை நோக்கி நடக்கும்போது உங்களுக்குள் அதற்கான இலக்கு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தோல்வியை பற்றி நினைக்காதீர்கள். அது வெற்றிக்கான தடைகள், தடைகளை தகர்த்தி வெல்லுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்குங்கள்.
வெற்றிப் பாதையில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்காது. ஆனால் நீங்கள் எக்காரணத்திற்காகவும் பிரச்சனையின் அங்க மாக மாறாதீர்கள். தற்போதைய சூழலை ஏற்றுக் கொண்டு உண்மைநிலையை உணருங்கள். அப்படி செய்வதால் புதிய சூழலுக்கு உங்களை உட்படுத்திக் கொள்ள முடியும்.
அனுபவம் அதை அனுபவிக்க வேண்டும். எனவே, கற்றதில் இருந்து கற்க வேண்டியதை கற்க கற்றுக் கொள்ளுங்கள்.
கடமையுணர்வு, சுயநலமின்மை, நேர்மை இவைகளை எல்லா நேரமும் உங்களுடன் இருக்க வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உடன்பாட்டு எண்ணங்கள் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் அது வாழ்க்கையை உண்மையாக உயரவைக்கும்.
நண்பர்களே, உங்கள் வமையை மதிப்பிடுங்கள். வெற்றியை உங்கள் வாழ்வில் அடையாளம் காணுங்கள். சுயஒழுக்கம் அதற்கான மதிப்பையும் புரிந்து கொள்ளுங்கள். நல்லவராக, நல்லதை செய்யக்கூடியவராக ஏன் இருக்க வேண்டும் என உங்களுக்குள் கேள்வி கேட்டுப் பாருங்கள். விடை கிடைக்காத போது பொறுமை காத்திருங்கள். ஆலோசனை கேளுங்கள். வெற்றிப் பயணத்தில் காத்திருத்தல் சுகம் அளிக்கும்.
வெற்றிக்கான தகவல் பெறுவது முக்கியம் அதேபோல தகவல் கொடுப்பது என்பது அதைவிட முக்கியம். விமானத்தில் பறக்கும் போது விமானிக்கு தகவல் பெறுவதும் தகவல் தருவதும் எவ்வளவு முக்கியமோ அதைப் போலத்தான் எல்லா செயலுக்கான வெற்றிக்கும் அதைச்சார்ந்த தகவல் முக்கியமானதாகிறது.
நட்பு, உறவு வளர்த்துக் கொள்ளுங்கள். அது வெற்றிக்கான விதையை வளர்க்க உதவும். வீதியில் வீசினால் விதை முளைக்காது. சிரத்தை எடுத்து நிலம் தோண்டி விதையிட்டு நிலம்மூடி நீர்ப்பாய்ச்சினால் விதைக்கப்பட்ட விதைக்கு வெற்றி; விதைத்த நபருக்கும் வெற்றி. திறம்படச் செய்ய சிரத்தை எடுத்தே ஆக வேண்டும்.
எதைச் செய்தாலும் காலத்தை கருத்தில் கொள்ளாமல் செய்துவிட முடியாது. காலம் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது. பூமி பிறந்தது எப்போது என காலம் கணிப்பதிருந்து பூமியில் மனிதன் தன் வாழ்க்கை இருக்கும் வரை காலம் அதன் வாழ்க்கையை வழிநடத்திட அத்தியாவசியமானது. அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டால் காலத்தின் சரியான பயன்பாடே நம் வெற்றியின் அளவுகோல். காலத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாட்டுடன் நாம் செயல்பட வேண்டும். ஆற்றுவெள்ளம் அது செல்லும் பாதையை பொறுத்து அதன் வேகம் மாறுகிறது. அப்படி செல்லும் ஆற்றில் நாம் எப்படி தொடர்ந்து நீந்த வேண்டும் என்பது போல்தான் காலத்தோடு நம் வாழ்க்கை. நீந்த முடியும் வரை வாழ்க்கை. கரையில் ஒதுங்குவதும், ஓய்வெடுப்பதும் மறுபடியும் நீந்த நம்மை தயார்படுத்திக் கொள்வதாகத்தான் அர்த்தமாகிறது. இல்லை யெனில் அத்தோடு வாழ்க்கையின் வரையறை என்றாகிவிடும். எனவே நண்பர்களே காலத்தில் நம் திட்டமிடலுடன் வெற்றியை நோக்கி பயணிப்போம்.
நண்பர்களே, இப்புத்தாண்டில் முழுமனதோடு கீழ்க்காணுமாறு உரக்க (மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு அல்ல; உங்கள் மனம் கேட்கும் அளவுக்கு) சொல்லுங்கள்.
>> என் செயல்களுக்கு நானே பொறுப்பு
>> அன்பு, ஆத்திரம், கோபம், முடிவெடுத்தல் முதயவற்றிற்கும் நானே பொறுப்பு.
>> மற்றவர்களுடன் எப்படி பழகியிருக்க வேண்டும், பழகவேண்டும் என்பதற்கும் நானே தான் பொறுப்பு
>> என் சுக துக்கங்களுக்கும் நானே பொறுப்பு
>> என் வாழ்க்கைக்கு முழு பொறுப்பும் என்னிடம் மட்டுமே உள்ளது.
>> பொறுப்புகள் என்னுடையதாக இருப்பதால் வெற்றியும் என்னுடையது.
>> வெற்றிப் பெறுவேன் வெற்றிப் பெறுவேன்
thanks Author: ஆர். முருகேசன், M.A., M.Phil., Ph.D. (Psy)

0 comments:

Post a Comment