Wednesday, October 26, 2011

போர் தொடு

முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.
உன்னுள்ளே அல்லது வெளியே இருக்கும் எதிரிகளை இனங்கண்ட பின்னரும் சும்மாயிருக்கலாமா? உடனே செயல்படுங்கள்.
உன் நண்பனே உன் எதிரி
உன் வகுப்பில் உன்னோடு படிக்கும் சில நண்பர்கள் – உன்னைப் புகைக்க அழைப்பார்கள். இப்போது சொல் அவர்கள் உன் எதிரிகள் தானே?
இவர்களில் சிலர் மனதளவில் ஆர்வத்தைக் குலைப்பார்கள். இரண்டு மடங்கு ஆர்வத்தோடு படிப்பது தான் நீ இவர்களுக்குக் கொடுக்கும் பதிலடியாகும்.
சிலர் வகுப்புக்கு அல்லது பள்ளிக்கு வெளியே சண்டைக்கு இழுப்பார்கள். இவரோடு நேரடியாக மோதாதே. பழிக்குப் பழி என்றபோக்குத் தவறானது. என் கண்ணைக் குத்தினான். எனவே அவன் கண்ணைக் குத்தினேன் என்று இருவரும் குருடாகலாமா?
தாக்க வந்தால் பொறுமையாயிரு. உடனே தலைமையாசிரியரிடம் சொல். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒருபோதும் சட்டத்தை நீ கையில் எடுக்காதே.
கழுத்தைப் பிடித்து நெருக்கினால் பொறுமையாய் இருக்காதே. திருப்பித்தாக்கு. நமது உயிரை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான உரிமை (Right of Private Defense) நமக்குள்ளளது.
எனக்கும் இப்படிப் பட்ட நண்பர்கள் இருந்தார்கள். கொஞ்சம் சண்டையும் போட்டேன். பிறகு ஞானோதயம் வந்தது. அவர்களை ஒதுக்கி விட்டு, படிப்பில் இரண்டு மடங்குஆர்வம் காட்டினேன். அவர்கள் இன்றும் சிட்டுக் குருவிகளாக – ஆட்டோ ஓட்டுநராக, ஆட்டோ பழுதுநீக்குபவர்களாக இருக்கிறார்கள். நான் மேகங்களின் மேலே பறக்கும் பருந்தாக – காவல்துறை உயர் அதிகாரியாக வலம் வருகிறேன். இப்போது அவர்கள் என்னிடம் உதவி கேட்டு வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது நான்தான் அவர்களுடைய சிறந்த நண்பன் என இப்போது சொல்கிறார்கள்.
எனவே தீய நண்பர்களோடு சேராதே. அவர்களுடைய சொல்லுக்கு செவி சாய்க்க வேண்டாம். அவர்களைப் பழிதீர்த்துக் கொள்ள ஒரே வழி – இரு மடங்கு வெறித்தனத்தோடு படிப்பது தான். இதுதான் நான் சென்றவழி, உனக்கு சொல்லும் வழி; எதிரிகளை வெல்லும் வழி.
உனக்குள்ளே எத்தனை எதிரிகள்
உனக்குள்ளேயே இருக்கும் எதிரியைச் சமாளிப்பது சற்று கடினம்தான். அதற்கு அதீத துணிச்சலும், மிகுந்த கட்டுப்பாடும் வேண்டும். கூடுதலாக நிறைய சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
உன் நண்பன் உன்னை புகைப்பிடிக்கச் சொல்கிறான். சரி எனத் தலையாட்டும் முன் – கை நீட்டும் முன், ஒரு கேள்வி கேள்.
நான் புகைப்பதை என் தாய் விரும்புவாளா? நான் புகைப்பதைப் பார்த்தால் ஏற்றுக் கொள்வாளா?
தாய் விரும்பாத ஒன்றை, நீயும் விரும்பாதே, விட்டொழி. ஒரு எதிரியை வீழ்த்தியாயிற்று.
முதல் மதிப்பெண் பெறுகிறான் உன் நண்பன். அவனைப் பார்த்து உனக்கேன் பொறாமை? அவன் முதல் மதிப்பெண் பெற விலையாகக் கொடுத்தது அவனது வியர்வை. அதை உணராமல், பொறாமைப்படுவது, அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது காலவிரயம். அவனைப் போல் நானும் உழைப்பேன். மதிப்பெண் பெறுவேன் என்று எண்ணி பொறாமை என்னும் எதிரியை வீழ்த்து.
உன் செயல்பாட்டுக்கு உன் உடலே தடையாக இருக்கலாமா? கூடுதல் எடையா? கூடுதல் விழிப்புணர்வு தேவை.
‘ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கு’ என்று கூறினர் நம் முன்னோர். உண்பதைக் குறை ஆனால் மனதில் உறுதி வேண்டும். வருத்த வேர்க் கடலையைக் கைநிறைய கொடுத்தாலும் ஒன்றை மட்டும் கொரித்து விட்டுப் போதும் எனச் சொல்லும்
மன உறுதி வேண்டும்.
பீசா, பர்கர் போன்றவற்றை உண்பதை நீக்கி, காய்களையும் கனிகளையும் உண்டால், பாரதியார் விரும்பியவாறு வாள் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடல் கிடைக்குமே.
தினமும் உடற்பயிற்சி செய்க. அல்லது வாரத்தில் மூன்று நாள்களாவது ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் என்பதை வழக்கப்படுத்திக் கொள். எடை குறைந்து, நடையில் மிடுக்கு ஏற்படும். தோற்றப் பொலிவு உண்டாகும். உனக்குள் நம்பிக்கையும் உற்சாகமும் ஒருசேர ஊற்றெடுக்கும். மிதமான உணவும் முறையான உடற்பயிற்சியும் மருத்துவ செலவைப் பாதியாய் குறைக்கும். ஆம். உடற்பயிற்சி ஒரு தவம். அதன் பயன் உடல் நலம் என்னும் வரம்.
இந்த நல்ல செய்தியை உன் பெற்றோருக்கும் சொல்.
நம் அக எதிரிகள் மற்றும் புற எதிரிகளுக்கான போரை நிறுத்தவே கூடாது. வாழும் வரை இப்போரைத் தொடருவோம்.
சர்.சி.வி. இராமன் (1888 – 1970)
சர் சந்திரசேகர வெங்கட்ராமன் திருச்சியில் பிறந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வளர்ந்தார். தந்தையார் ஒரு பேராசிரியர் என்பதால், இராமனின் கல்விச்சூழல் நன்றாக இருந்தது.
சென்னை மாநிலக் கல்லூரியில் 1905-ம் ஆண்டு இயற்பியல் தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டம் பெற்றார். 1907ல் சிறப்புத் தேர்ச்சியுடன் கூடிய முதுநிலைப் பட்டம் வென்றார். சிறிது காலம் அரசுத்துறை நிதிக் கணக்காயராக இருந்து விட்டு, 1917ல் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். கற்பித்தல் பணியோடு ஆய்வுப் பணியையும் மேற்கொண்ட இராமன், 1928ல் ஒளி விலகலை ஆராய்ந்து இராமன் விளைவு என்னும் புதிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். தொடர்ந்து ஆய்வு செய்து 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். வெள்ளையரல்லாத ஒருவர் அறிவியல் நோபல் பரிசு பெற்றார் என்னும் பெருமை அவருக்கே உரித்தாயிற்று. பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் ஆனார்.
இவருடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு கூர்கிறார்.
26.01.1954 அன்று உங்களுக்கு இந்திய அரசு மிக உயரிய பாரத ரத்னா விருதை வழங்க உள்ளது. முன்னதாகவே வந்து என் விருந்தினராக தங்க வேண்டும் – இப்படி ஒரு மடல் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்களிடமிருந்து வந்தபோது, இராமன் அவர்கள் பணிவோடு மறுமொழி விடுத்தார்.
மன்னிக்க வேண்டும். என்னுடைய மாணவர் ஒருவர் பிஎச்.டி. ஆய்வேட்டை என் வழிகாட்டல் முடிக்கும் தருவாயில் உள்ளார். உடனிருந்து அவருக்கு உதவ வேண்டிய நிலையில் உள்ளேன். எனவே உங்கள் விருந்தோம்பலை ஏற்க முடியாத நிலை.
விருது வழங்கும் விழா அன்று தான் டெல் சென்றார். விருது பெற்றகையோடு பெங்களூருக்கு விரைந்தார். குறிப்பிட்ட நாளில் தன் மாணவர் பிஎச்.டி. ஆய்வேட்டை சமர்ப்பிக்க உதவினார்.
விழா விருந்து முதயவற்றை விட கடமைதான் முக்கியம் என்று கருதினார். இந்த உணர்வுமிக்க ஆசிரியப்படை உருவானால், ஆயிரமாயிரம் அறிவியல் மேதைகளை, கண்டுபிடிப்பாளர்களை இன்றும் நம் நாட்டில் உருவாக்க முடியும்.
இப்போது புரிகிறதா? இந்தக் கடமை உணர்வு யாருக்கு வரும்? தமக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள எதிரிகளை வென்றவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் – இது சத்தியமாகும்.
முனைவர் சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அவர்களின் ஆர்ஹ்ள் ஹய்க் எண்ழ்ப்ள் ” Boys and Girls “Be Ambitions”" ஆங்கில நூலிலிருந்து தமிழாக்கம் முனைவர் “இனியன்’
திரு. கோவிந்தராஜூ

0 comments:

Post a Comment