Sunday, January 13, 2013

சூரிய வழிபாடு

Posted Image





01.01.13 புத்தாண்டு பொங்கல் ஸ்பெஷல்  

   பாரதத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று  ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து  வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான்  என்கின்றன, வேதங்கள்! 

இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி நிச்சயமாக ஒன்றும்  கூறமுடியவில்லை. கி.மு.2000-க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை  இந்தியர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த  நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை.  பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம்  குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப்  பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும்  தெய்வமாக விளங்குகிறான். 



Posted Image


சூரியன் ஒரு கோள்! கிரகம்! அதைக் கடவுளாக வழிபடலாமா  என்ற சந்தேகம் எழலாம். வேதம் ஒன்றுதான் இந்த சந்தேகத்தைப் போக்குகிறது.  வேதமே, சூரியன் கோள மயமானதுதான் என்கிறது. வேதகால ரிஷிகள், ‘சூரியனே  தண்ணீருக்கெல்லாம் ஆத்மா என்று குறிப்பிடுகிறார்கள். சூரியனால் உலகத்துக்கு  ஏற்படும் நன்மைகளையும் வேதம் வரிசைப்படுத்திக் கூறுகிறது. 

வேதத்தில்  காணும் உண்மைகள், நவீன விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக இல்லை. சூரிய ஒளியில்  நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணமாகப் பிரிகிறது. ஏழு வண்ண ஒளியின்  சேர்க்கையே சூரிய ஒளி. சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன்  சூட்சுமம் இதுவே. குதிரையை அசுவம் என்பர். அசுவம் என்ற சொல்லுக்கு வண்ணம்  என்றும் பொருளுண்டு. 

பாரசீகத்தில் தங்கிவிட்ட ஆரிய குலத்தினர்  சூரியனை வழிபட்டார்கள் என்றாலும், அக்னிக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம்  கொடுத்தார்கள். இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் திராவிடர்களுடன் கலந்து  விக்ரக ஆராதனையை மேற்கொண்டார்கள். சூரியனை விஷ்ணுவின் அவதாரமாக இவர்கள்  கொண்டார்கள். 

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள்  குணமாகிவிடும் என்று பாரசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான  மாகாஸ்கள், சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக  விளங்கினர்.

பஞ்சாபை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தோல் நோய் ஏற்பட்டது.  அவன் மாகாஸ்களை வரவழைத்தான். நோய் குணமாகவே, இப்போது பாகிஸ்தானில் உள்ள  ‘மூல்தான்Õ நகரில் அவன் சூரியனுக்காகவே ஒரு கோவில் கட்டுவித்தான். 2000  ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த ஆலயம்தான் பண்டைய இந்தியாவில் சூரியனுக்காக  ஏற்பட்ட முதல் கோயில்.

இந்த ஆலயம் அவுரங்கசீப் காலத்தில்  அழிவுற்றது. மூல்தானிலிருந்து சூரியவழிபாடு காஷ்மீருக்குப் பரவியது. பிரபல  மன்னனான லலிதாதித்ய முக்தா பீடன் என்பவன் இங்கே சூரியனுக்கு ஒரு கோயில்  கட்டினான். இந்தக் கோயில், கிரேக்க ஆலய அமைப்பில் கட்டப்பட்டது. பின்னர்  வந்த இஸ்லாமிய மன்னன் சிக்கந்தர் பட்டீஸ்கான் (கி.பி.1391 - 1414) இந்தக்  கோயிலை இடித்து நாசமாக்கி விட்டான். 

சூரியனுக்காகக் கட்டிய  புராதனக் கோயிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோயில். கலிங்கத்தை ஆண்ட  நரசிங்க தேவன் (கி.பி.1238 - 64) இதைக் கட்டினான். இப்போது இந்தக் கோயிலின்  ஒரு பகுதி மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள்  உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.

தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது.

சூரியனைப்  பரம்பொருளாக ‘ஆதித்ய ஹிருதயம் கூறுகிறது. மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய  புராணம் முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி  வாய்ந்ததாகக் கருதப்படும் ‘காயத்ரிÕ சூரியனுக்கு உகந்த மந்திரம்.

‘சூரிய நமஸ்காரம்Õ என்பது உடற் பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. இன்று இது மேனாட்டிலும் பரவியுள்ளது.

சூரிய  வழிபாடு ‘சௌர மதம் என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து  வந்திருக்கிறது. சௌர மதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும்  பரவியிருக்கிறது. ரோமில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்தையே  சௌரம் எதிர்த்து நின்றது. கி.மு.1400-ஆம் ஆண்டு முதலே மத்திய கிழக்கு  நாடுகளிலும் அது பரவியிருந்தது. எகிப்தில் சூரியனை ‘ரேÕ அல்லது ‘ரா-அதுன்  என்று குறிப்பிட்டார்கள். எகிப்திய அரசர்கள் தங்கள் பெயரோடு ‘ரே என்ற  பெயரையும் சேர்த்துக் கொண்டார்கள்.

ஆதிகாலத்தில் சௌர மதத்தினர் சூரியனுக்கு ரத்த அர்க்கியம் கொடுத்து வழிபட்டார்கள். ஆதிசங்கரர்தான் இதை மாற்றினார்.

தை  மாதம் முதல் நாள் - சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கும்  நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள்.  கீதையில் கண்ணபிரான் ‘ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான்’ என்று கூறி,  ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் கனிந்த ஒளியிலே நாள் தவறாமல்  திளைத்து வந்தார்கள். சூரிய கிரணங்களை ‘ஜீவத்திறல்Õ என்றும் ‘ஆயுளை  வளர்க்கும் அன்னம்Õ என்றும் போற்றினார்கள். அவர்கள் உடல், உள்ளம், உயிரில்  தேவசக்தியும் தெய்வ ஒளியும் துள்ளின. 

சுற்றும் உலகுக்கே சூத்திரமாக  விளங்கும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய்விட்டது. என்றாலும்,  பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும்  தொடர்கிறது...!


ஆர். சி. சம்பத்

நன்றி"குமுதம்"

0 comments:

Post a Comment